Monday, January 30, 2006

சானியா மிர்சாவுக்கு பத்மஸ்ரீ விருது-சில சந்தேகங்கள்

சானியா மிர்சாவுக்கு மத்திய அரசால் வழங்கப் படும் விருதான பத்மஸ்ரீ விருது வழங்கப் படுவதாக செய்திகள் படித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

இதன் தொடர்ச்சியாக எனக்குள் எழுந்த சில ஐயப்பாடுகள்.

சானியா மிர்சா உலக தர வரிசையில் 32 வது இடத்தில் இருக்கிறார் என்பது மிகவும் பெருமைப் படத்தக்க விஷயமே என்பதில் இருவேறு கருத்துக்கள் இல்லை. மற்றபடி விளையாடும் திறமையைப் பொறுத்தவரை இவர் கடந்து செல்ல வேண்டிய பாதைகள் நிறையவே உள்ளன.

இவருடைய service(தமிழ்?)போடும் முறையும், வேகமும் இன்னும் மேம்பட வேண்டும். ஆடுகளத்தில் பந்தை விரட்டவும், place பண்ணும் லாவகமும் நிறைய கைகூடவேண்டும்.

என்னவோ மிர்சா டென்னிசில் முதலிடத்தையே பெற்றுவிட்டதைப் போல ஒரு தோற்றத்தை மீடியாக்களும், இதற்கு துணையாக அரசும் செயல் படுவது வேதனை தான். வேடிக்கை தான்.

டெண்டுல்கர் ஒரு மேட்சில் செஞ்சுரி அடித்து விட்டால் தூக்கி வைத்து கொண்டாடுவதும், நாலு மேட்சில் ரன் எடுக்கவில்லை என்றால் ஒரங்கட்டுவதும் மீடியாக்களுக்கும் நமக்கும் வாடிக்கை தானே?

இவருடைய நிலை இவ்வாறிருக்க, 32வது இடத்தில் இருக்கும் ஒருவருக்கு இந்த விருது பொருந்துமா என்ற கேள்வி தவிர்க்க முடியாதது ஆகிவிடுகிறது.

இந்த விருது இவருக்கு வழங்கப் பட்டது சரியென்றே வைத்துக் கொண்டலும், இதுவரை சாதனைகள் பல படைத்த பல பேருக்கு என்ன விருது வழங்கப்பட்டது.


தங்க மங்கை என்று அழைக்கப் பட்ட பி.டி உஷா, ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மல்லேஸ்வரி, லியாண்டர் பயெஸ், அஞ்சு ஜார்ஜ் இவர்களெல்லாம் சாதனைகள் செய்யவில்லையா. இவர்களெல்லாம் விருதுக்கு தகுதியில்லையா?.

அதுசரி, ஒலிம்பிக் ஜோதி இந்தியா வந்த போது அதை நடிகர்களிடம் கொடுத்து ஆரம்பித்து வைத்து சந்தோஷப் பட்டவர்களில்லையா நாம்?

விளையாட்டு நமக்கு 'விளையாட்டாய்' ஆகிவிட்டது

Saturday, January 28, 2006

நம் காதில் பூ நிச்சயம்!!

அனைவருக்கும் வணக்கம்.

செய்திகள்

பீகார் கவர்னர் தேசியக் கொடியேற்றிய பிறகு முந்தைய ஆட்சிக் கலைப்புக்கு பொறுப்பேற்று ராஜினாமா.

கர்நாடக முதல்வர் தரம்சிங் ராஜினாமா மற்றும் குமாரசாமி ஆட்சி அமைக்குமாறு கவர்னர் அழைப்பு.

இவை போன்ற செய்திகள் நம் இந்திய ஜனநாயகத்தில் மிகச் சாதாரணமாக நடக்கின்றன.

இதில் பீகார் ஆட்சிக் கலைப்புக்கு சொன்ன காரணம் 'குதிரை பேரம்' நடக்கிறது. (பாஜக, எம் எல் ஏக்களை விலைக்கு வாங்குகிறது?!!!)

ஆகையால், கர்நாடகாவில் குதிரை பேரம் நடக்காமல் இருக்க எம் எல் ஏக்கள் கௌரவச் சிறையில் வைக்கப் பட்டனர். (காங்கிரஸ், எம் எல் ஏக்களை விலைக்கு வாங்காமல் இருக்க??!!)

உண்மையைச் சொல்லப் போனால் அவரவர்கள் தங்கள் பதவியை தக்க வைத்துக் கொள்ள கட்சி பாகுபாடின்றி இது போல செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது என்னைப் போன்றவர்களுக்கு.

இன்னும் கர்நாடகாவில் நிறைய அரசியல் பரபரப்புக் காட்சிகள் அரங்கேறும் வாய்ப்புகள் உள்ளன. ஆகையால் நமக்கு பொழுதுபோக்குகளுக்கு பஞ்சமில்லை. எல்லோரும் டிவியில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை தவிர்த்து விட்டு அரசியல் நகைச்சுவைகளை ரசிக்கலாம்.

இதுபோக தமிழகம் அடுத்த தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இப்பொழுது எந்த கட்சியுடன் யார் இருக்கிறார்கள், வரும் தேர்தலில் யாருடன் யார் இருப்பார்கள் என்று அனைவரும்(வாக்காளர்கள்) ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதிமுக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக சலுகைகளையும், திட்டங்களையும் அறிவித்துக் கொண்டு, கூட்டணிக்காக கதவுகளை திறந்தே வைத்திருப்பதாக கூறுகிறது.

ஏழு கட்சிக் கூட்டணியின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

வைகோ எங்கள் ரத்தம் எல்லா குரூப்பிலும் சேரும் என்று ஒரு பக்கம்.

வழக்கம் போல் மருத்துவர் ராமதாஸ்(இது தமிழ்??)சீட்டு கணக்கு பார்த்துக் கொண்டிருக்கிறார்.

கம்யூனிஸ்டுகள் மதில் மேல் பூனை.

திமுக மத்தியில் கூட்டணியில் இருப்பதால் காங்கிரஸைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.(இந்த லட்சணத்தில் கூட்டணி ஆட்சி என்ற கோஷம் வேறு. காங்கிரஸ் என்றால் காமடி?)

இதில் போதக் குறைக்கு கேப்டன் வேறு. பாவம் தமிழ் வாக்காளப் பெருமக்கள்.

இதில் ஹைலைட் என்னவென்றால் பார்வார்ட் பிளக் கட்சியின் மாநில பொதுசெயலாளர்.(யார்னு தெரியலியா? அலைகள் ஓய்வதில்லை நாயகன்). இதெல்லாம் கொடுமையல்லாமல் வேறென்ன?.

ஆக, எதிரும் புதிருமாக இருந்த கட்சிகள் கூட்டனி அமைக்கும் போது நம் காதில் பூ நிச்சயம்!!.அனைவரும் தயாராக இருங்கள்.

மீண்டும் சந்திக்கிறேன்.

Thursday, January 26, 2006

சுய புராணம்

நீண்ட நாள் யோசித்து யோசித்து அப்படி இப்படி என்று ஒரு வழியாக ஆரம்பித்தாயிற்று.

இந்த வலைப் பூவில் என்ன எழுதுவது எதைப் பற்றி எழுதுவது என்ற வரைமுறைகள் ஏதும் இல்லை. ஆனால் ஆரோக்கியமான விஷயங்கள் மட்டுமே இடம் பெறும்.

நான் எழுத்தாளனோ, சிந்தனைவாதியோ, அறிவிஜீவியோ இல்லை. இல்லை. இல்லை.

இது தான் என் முதல் எழுத்து. பல முறை எழுத நினைத்ததுண்டு. ஆனால் துணிந்ததில்லை. ஆகையால் மிகவும் எதிர்பார்ப்புடன் வருபவர்கள் தயவு செய்து மன்னிக்கவும்.

இங்கு என்னைப் பற்றிச் சொல்ல அதிகம் இல்லை ஜெண்டில்மேன். நான் ஒரு சாதாரணமான சராசரி மனிதன்.

எல்லோரையும் போல நானும் உணர்வுகளின் தொகுப்பு தான்.

சொல்றேன் கேளுங்க ( இல்ல படிங்க)

பேரு : விஜயன்னு சொல்றாங்க.

ஊரு : வேலனோட கடைசி வீடு

அப்பா : திரு.முனுசாமி. (மரியாதை தான்!!)

வயது : நாலு கழுதை வயசாவுதுன்னு எங்க ஆத்தா சொல்லும்.

கல்யாணம் : பொண்டாட்டிய பக்கத்துல வச்சுகிட்டு கேக்கற கேள்வியா இது?

புள்ள குட்டிங்க : ரெண்டும் வாலுங்க.

படிச்சது : இந்த இடத்துல தான் மாநிலத்துல ரெண்டாவது பெரிய ஜெயில் இருக்குது.

பொழப்பு : நெறய ஊரு மெய்ஞ்சுட்டு இப்ப தென் கொரியா (அய்யோ ரொம்ப கஷ்டங்க சாப்பாட்டுக்கும் பேசறதுக்கும்)

தொழில் : அட ஏங்க கேக்கறீங்க. இரும்புங்க கூட ஒரே சத்தம்.

சம்பளம் : பாத்தீங்களா. ஊர்லயே நெறய பேருக்கு சொல்ல மாட்டேன்.

பொழுதுபோக்கு : மெயினா ஊர் சுத்தறது தாங்க. அப்புறம் பாட்டு, புக்கு, ஊர் வம்பு பேசறது.

பிடித்த ஹீரோ : அப்துல் கலாம். ( நீங்க சினிமாவுல கேக்குறீங்களா?!)

பிடித்த ஹீரோயின் : சத்தியமா குஷ்பூ இல்லீங்க.

நகைச்சுவை நடிகர் : தமிழ் நாட்டு அரசியல் வா(வியா)திகள்

பிடித்த அரசியல்வாதி : வம்புங்க. அப்புறம் எது எழுதினாலும் சீல் குத்திடுவீங்க.

காதல் : அப்டீன்னா என்னங்க. (ஹலோ இது ரொம்ப ஓவரா தெரியல?)

சரி. இதுவரைக்கும் இது போதும்.

நீங்க என்ன நினைக்கிறீங்க?